டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு: குரூப் 1 தேர்வு முடிவுகளை 4 மாதத்தில் வெளியிட வேண்டும்

டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு: குரூப் 1 தேர்வு முடிவுகளை 4 மாதத்தில் வெளியிட வேண்டும்
குரூப்-1 தேர்வு முடிவுகளை நான்கு மாதத்தில் வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி. மூலம்தேர்வுகள் நடத்தி நிரப்பப்படுகிறது.


குரூப் 1 உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடங்களுக்கு பல கட்ட தேர்வுகள் நடத்தி, இறுதியில் நேர்முகத் தேர்வு மூலம் பணியிடம் நிரப்பப்படும். ஆனால், இந்த தேர்வு நடைமுறைகளை நடத்தி முடிக்க அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டு கணக்கில் காலம் எடுத்துக் கொள்கிறது. உதாரணத்துக்கு, கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் ஒன்றரை ஆண்டு கழித்து தேர்வாணையம் வெளியிட்டது. பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் தேர்வு முடிவுகளை கூட, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 45 நாட்களில் வெளியிடுகிறது. டி.என்பிஎஸ்சியில் தேர்வு பணிகளை முடித்து விரைவில் முடிவுகளை வெளியிடுவதற்காக ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை திருத்தும் இயந்திரங்கள் பலகோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டது.


ஆனால், அது முறையாக பயன்படுத்தப் படவில்லை.கடந்த நவம்பர் 8ம் தேதி, 74 குரூப்- 1 பணியிடங்களுக்கு முதல் நிலைத் தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தியது. இந்த தேர்வை நானும் எழுதியுள்ளேன். தேர்வுமுடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால் 34 வயதான என்னை போன்றவர்கள் பாதிக்கப்படுவர். விரைவில் தேர்வு முடிவை வெளியிடக்கோரி, கடந்த நவம்பர் 15ம் தேதி கொடுத்த மனு மீது டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. எனவே, கடந்த நவம்பர் மாதம் நடந்த குரூப்-1 தேர்வின் முதல் நிலை தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. கல்யாணசுந்தரம், குரூப் 1 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதல் நிலைத் தேர்வு முடிவுகளை நான்கு மாதத்தில் வெளியிட வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு